படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை பயணம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க 17 பேர் கொண்ட மீனவர்கள் குழு இலங்கை சென்றுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஜூலை 17-ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற செல்லத்துரை என்பவரின் படகின் மீது, இலங்கை மீனவர்கள் வெடிகுண்டு வீசியதால், படகு கடலில் மூழ்கியது.
அதில் இருந்து தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்த தகவலை வைத்து அந்தப் படகை மீட்க மீன்துறை அனுமதியுடன் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி நான்கு படகில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குச் சென்றனர்.
யரணைத்தீவு கடல் பகுதியில் மூழ்கிய படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் நான்கு படகின் மீதும் வெடிகுண்டுகளை வீசினர். இதில் பால்துரை என்பவரின் படகு மூழ்கியது.
அந்தப் படகில் இருந்த மீனவர்கள் வேறு படகில் ஏறி மற்ற மூன்று படகுகள் மூலம் தமிழகம் திரும்பினர். திரும்பும் வழியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரிடம் நடந்த விபரங்களைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து இலங்கை கடற்படையினர் மீனவர்களுடன் இணைந்து மூழ்கிய படகை மீட்க முயற்சித்தும் பலனில்லாமல் போனது.
இந்நிலையில் அடுத்த சில நாட்களில் இரண்டு படகையும் மீட்டு தலைமன்னார் கடற்படை முகாமில் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை தலைமன்னார் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்ல மத்திய அரசிடம் இருந்து அனுமதி வந்தது. இதையடுத்து மீனவர்கள் கணேசன், பாக்கியராஜ் உட்பட 17 பேர் மூன்று படகில் தலைமன்னார் புறப்பட்டுச் சென்றனர்.
கடலோர காவல் படை கப்பலின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட 17 மீனவர்களும், இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கிருந்து அவர்கள் இலங்கை தலைமன்னார் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு படகுகளையும் மீட்டு ராமேஸ்வரம் திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.