திபெத்தில் பரவும் அரிய வகை எலும்பு நோய் : 1.70 லட்சம் பேரை தாக்கும் அபாயம்
பீஜிங்: திபெத் பகுதியில் உள்ள மக்களுக்கு குணப்படுத்த முடியாத அரிய வகை எலும்பு தொடர்பான நோய் பரவி வருகிறது. இதனால் 17,000 பேர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
காம்டோ பெர்பெக்சர் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் 14, 662 பேருக்கு காஷின்-பெக் நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்தப் பகுதி தான் என்று உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1.70 லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கணித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூட்டுகள் சிதைவடைந்து விடுகிறது. இதனால் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை.
இந்த நோய்க்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பகுதிகளில் அதிக அளவில் சாப்பிடப்படும் பார்லியில் உள்ள பூஞ்சை தான் இந்த எலும்பு நோய் ஏற்படக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். குறைந்த அளவில் அயோடின் உட்கொள்ளுவது இன்னொரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய் பரவாமல் தடுக்க மக்களை வேறு இடங்களுக்கு போகுமாறு உள்ளூர் அரசு அறிவுறுத்துகிறது.