நெல்லை பெண் இன்ஜினியர் கொலை: பெங்களூர் போலீசார் விசாரணை
நெல்லை: பெங்களூரில் நெல்லை பெண் இன்ஜினியரை கொன்றது தொடர்பாக நாகர்கோவிலைச் சேர்ந்த அவரது நெருங்கிய உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். மாயமான அந்த உறவினரின் நண்பர்கள் இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் மலர்விழி. கணவர் பாலசுப்பிரமணியத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார். இவர் கடந்த 1-ம் தேதி மர்ம நபரால் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். கொலையாளியை பிடிக்க பெங்களூர் தனிப்படையினர் நெல்லையில் முகாமி்ட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மலர்விழியின் நெருங்கிய உறவினர் தான் கொலையாளி என்பதும், நாகர்கோவிலைச் சேர்ந்த அவர் தலைமறைவாகிவிட்டதும் தெரிய வந்ததுள்ளது. கொலையாளின் நெருங்கிய நண்பர் இருவரைப் பிடித்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
திருமணத்திற்கு முன் மலர்விழியை நாகர்கோவிலைச் சேர்ந்த அவரது நெருங்கிய உறவினர் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் வேறு இடத்தில் அவருக்கு திருமணம் ஆனதால் அவரது காதல் கைகூடவில்லை. இதனால் திருமணத்திற்கு பின்னரும் மலர்விழியை அடைந்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த அவர் பெங்களூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்லும் வழியில் பெற்றோருடன் மலர்விழி வீ்ட்டுக்கு சம்பவதன்று காலையில் சென்றுள்ளார். பின்னர் பெற்றோரை சகோதரி வீட்டில் விட்டுவிட்டு இவர் மட்டும் தனியாக மாலையில் மலர்விழி வீ்ட்டிற்குச் சென்று அவரை கொலை செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கொலையாளியை நெருங்கிவிட்டதாகவும் ஓரிரு நாளில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் தனிப்படையினர் தெரிவித்தனர்.