குலசையில் 2 பெண்கள் தற்கொலை : இறந்தவர்கள் யார் என்று தெரியவில்லை
உடன்குடி: குலசேகரபட்டிணம் கடற்கரையில் நேற்று காலை 2 பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
குலசேகரபட்டிணத்தில் தசரா விழாவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள கடற்கரையில் கூடியிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கோவிலுக்குத் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் அருகில் இரு பெண்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த பக்தர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இறந்த பெண்களுக்கு சுமார் 35 வயது இருக்கும். ஒரு பெண் கருப்பு நிறத்தில் ரோஸ்கலர் பூபோட்ட சேலையும், மற்றொரு பெண் பிரவுன் கலர் சேலையும் அணிந்திருந்தனர். இவர்கள் யார், எதற்காக இங்கு வந்து தற்கொலை செய்தார்கள், சகோதரிகளா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.