பெண் கற்பழித்து எரித்துக் கொலை.... மாவோயிஸ்டுகள் கொடூரம்
கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்றனர் மாவோயிஸ்டுகள்.
மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜம்பா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோபால். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொண்டர். இவரது மனைவி ஜெயந்தி மந்திரி.
கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி இந்த கிராமத்துக்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் கோபாலையும், அவருடைய மகன் ராஜீவ்வையும் சுட்டுக் கொன்றனர்.
இதை தொடர்ந்து ஜெயந்தி மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ரகசியமாக பொதுமக்களை திரட்டினார்.
இதுபற்றிய தகவல் மாவோயிஸ்டுகளுக்கு கிடைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாவோயிஸ்டுகள் கடந்த 8-ந்தேதி இந்த கிராமத்துக்குள் புகுந்து ஜெயந்தியை கடத்திச் சென்றனர். அவர் கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் ஜெயந்தி எரித்து கொல்லப்பட்ட நிலையில் காட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
மாவோயிஸ்டுகள் அவரை கற்பழித்து விட்டு பின்னர் எரித்து கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.