புலிகளுக்கு ஆயுத கொள்முதல் செய்த பால்ராஜ் நாயுடுவுக்கு தண்டனை!
வாஷிங்டன்: விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை கொள்முதல் செய்ய முயற்சித்ததாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூர் நாட்டவர் பல்ராஜ் நாயுடு மீது சுமத்தப்பட்ட புகார் நிரூபணமானது.
அவருக்கான தண்டனையை நிர்ணயிப்பது தொடர்பான விசாரணை வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆயுதம் கொள்முதல் செய்ய முயற்சித்ததால் 2006 பிப்ரவரியில் பால்டிமோர் மாவட்ட நீதிபதி கேத்தரின் பிளேக் முன்னிலையில் 5 நாள் விசாரணை நடந்தது.
அப்போது கிடைத்த ஆதாரங்கள் படி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பல்ராஜ் நாயுடு மற்றும் அவரது கூட்டாளிகள் பின் உஸ்மான், ஹாஜி சுபந்தி, எரிக் ஒடுலோ, திருநாவுக்கரசு வரதராசா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
சீனா, தாய்லாந்து, வட கொரியா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து புலிகள் போரிட உதவும் வகையில் ஆயுதங்களை கொள்முதல் செய்ய முயற்சித்தது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டனர்.
அவர்களின் தவறுக்கு ஏற்ப 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கொள்முதல் முயற்சி தொடர்பான வழக்கில் நாயுடுவுக்கு (48) 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.