பஸ்சை ஓட்டிக்கொண்டிருக்கையில் டிரைவர் மாரடைப்பால் மரணம்: பயணிகள் உயிர் பிழைப்பு
சென்னை: சென்னையில் பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும்போதே ஓட்டுநர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த போலீஸ் நிலையத்திற்குள் மோதி நின்றது. அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு வரை செல்லும் அரசுப் பேருந்து (தடம் எண் எம்-59) காலை 11 மணியளவில் வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்து மதுரவாயல் அருகே சென்று கொண்டிருக்கையில் பேருந்து ஓட்டுநர் மனோகரனுக்கு (50) திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. மயக்க நிலையிலேயே அவர் பேருந்தை ஓட்டினார். இதனால் பேருந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மனோகரன் ஸ்டீயரிங் மீதே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து பேருந்து சாலையில் இருந்து இறங்கி அருகில் இருந்த காவல் நிலைய வளாகத்தில் புகுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஏராளமான வாகனங்களை நசுக்கியது. பிறகு அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் வயர்களை அறுத்துக் கொண்டு மின் கம்பம் சாய்ந்தது.
பின்னர் பேருந்து மரத்தின் மீது மோதி நின்றது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
மயங்கிய மனோகரனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.