திருமாவளவன் ராஜினாமா செய்ய வேண்டும்-10 முறை கோரிய கார்த்தி சிதம்பரம்

திருமாவளவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அப்போது பத்து முறை கூறினார் கார்த்தி சிதம்பரம்.
ப.சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான் இல்லத் திருமணம் இன்று காலை சிதம்பரத்தில் நடந்தது. இதில் கார்த்தி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கூறுகையில், காங்கிரஸ் கட்சி 125 வருட பாரம்பரியமிக்கது. அந்த கட்சியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. காங்கிரஸ் தயவால் எம்.பி.யான திருமாவளவன் அந்த கட்சியை விமர்சிக்கிறார்.
வேண்டுமென்றால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விமர்சிக்கட்டும். இலங்கைக்கு சென்று ராஜபக்சேவுடன் டீ-வடை சாப்பிட்டு விட்டு வேறு எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டு, இங்கே வந்து கடுமையாக விமர்சிக்கிறார். நேருக்கு நேர் அங்கேயே பேச வேண்டியதுதானே.
கலைஞருக்கு இவர் ஆலோசனை கூறுகிறார். காங்கிரஸை விட்டு விலகுவோம் என்று கலைஞருக்கு இவர் ஆலோசனை கூறவேண்டியதுதானே. அப்படி கூறினால்தான் கலைஞர் ஏற்றுக்கொள்வாரா.
இவர் எம்.பியாவதற்கு காரணம் காங்கிரஸ்தான். பதவி மட்டும் வேண்டும்; அப்பதவி வருவதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி மட்டும் வேண்டாமா?.
இனி திருமாவளவன் காங்கிரசை விமர்சிக்ககூடாது. அப்படி விமர்சித்தால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விமர்சிக்கட்டும் என்றார் கார்த்தி.
தனது பேச்ச்சின்போது திருமாவளவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பத்து முறைக்கு மேல் கார்த்தி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications