எஸ்.பி.யையே ஏமாற்றிய கில்லாடி இன்பார்மர்: ரூ. 5 லட்சம் மோசடி
திருவனந்தபுரம்: போதை மருந்து கடத்தல் பற்றிய ரகசிய தகவல் தருவதாகக் கூறி, எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிய போலீஸ் இன்பார்மரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் காசரக்கோட்டைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப். இவர் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டு வந்தார். ஏராளமான போதை மருந்து கடத்தல்காரர்கள் குறித்து போலீசார், சுங்கதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வந்தார். இதற்காக அவர் சன்மானமும் பெற்று வந்தார். ஆரம்பத்தில் சரியான தகவலை கொடுத்து வந்த அவர் பிறகு தவறான பல தகவல்களை கொடுத்தும் சன்மானம் வாங்கத் தொடங்கினார்.
போதை மருந்து கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தருவதாகக் கூறி கடந்த 2005-ம் ஆண்டு திருச்சூர் எஸ்.பி.யாக இருந்த விஜயனிடம் ரூ.5000 வாங்கிவிட்டு தலைமறைவாகி விட்டார்.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதிய போலீசார் ஷெரிபை கைது செய்து சாதாரண வழக்கு பதிவு செய்து விடுவித்தனர். அவரை பற்றி தொடர்ந்து நடந்த விசாரணையில் மேலும் பல போலீஸ் அதிகாரிகளிடமும், சுங்கத்துறை அதிகாரிகளிடமும் அவர் ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.
இது குறித்து கேரள காவல்துறை ஆணையர் சுப்பையன், திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் அஜித்குமாரிடம் புகார் அளித்தார். இதன் பேரி்ல் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷெரீபை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications