ராஜீவ் காந்தி பிறந்த மும்பை மருத்துவமனை இடிக்கப்படுகிறது
மும்பை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த மும்பை கம்பல்லா ஹில் மருத்துவமனை இடிக்கப்படவுள்ளது.
கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் உள்ளது இந்த மருத்துவமனை. நான்கு மாடிகள், 50 படுக்கை வசதிகளுடன் கூடியதாக தற்போது இது உள்ளது. மும்பையின் மிகப் பழமையான, பிரபலமான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. தற்போது இதை மிகப் பிரமாண்டமான மருத்துவமனையாக மாற்றவுள்ளனர்.
22 மாடிகளைக் கொண்ட, 220 படுக்கைகளுடன் கூடிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இது மாறவுள்ளது. மேலும் ஹெலிபேடும் இதில் இடம் பெறவுள்ளது. தெற்கு மும்பையில் ஹெலிபேட் வசதியுடன் கூடிய முதல் மருத்துவமனை என்ற பெயரும் இதன் மூலம் இந்த மருத்துவமனைக்குக் கிடைக்கும்.
மருத்துவமனை விரிவாக்கத்திற்கு அருகில் உள்ள நிலத்தையும் மருத்துவமனை உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். இன்னும் 6 மாதங்களில் இங்கு விரிவாக்கப் பணிகள் தொடங்கவுள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை அறங்காவலர்களில் ஒருவரான விஜய் ஷெட்டி கூறுகையில், முதலில் 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கப்படும். பின்னர் தற்போது உள்ள மருத்துவமனை கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கும் என்றார்.
ராஜீவ் காந்தி இந்த மருத்துவமனையில்தான் பிறந்தார். இந்த மருத்துவமனைக்கு பெரும்பாலும் பெரும் பணக்காரர்கள்தான் வருவது வழக்கம். இருந்தாலும் ஏழைகளுக்கும் இந்த மருத்துவமனையில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கிறார்களாம்.
மேலும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைச் செலவும் மிக மிக அதிகம். இதனால் ஏழைகளால் இந்த மருத்துவமனையைப் பற்றி நினைக்கக் கூட முடியாத நிலை உள்ளது. இதை விஜய் ஷெட்டியும் ஒத்துக் கொள்கிறார். அதேசமயம், மிக அதிக அளவில் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. நியாயமாகத்தான் வசூலிக்கிறோம். இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு 2 லட்சம் மட்டுமே வசூலிக்கிறோம் என்றார் ஷெட்டி.