மீனவர்களை புலிகள் என்று நினைத்து இலங்கை கடற்படை தாக்குகிறது-கடற்படை தளபதி
சென்னை: இலங்கைக் கடற்படை திட்டமிட்டு தமிழக மீனவர்களைத் தாக்குவதில்லை. விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்துதான் இலங்கை கடற்படையினர் தாக்குகின்றனர் என்று இலங்கை கடற்படைக்கு முற்றிலும் ஆதரவாகப் பேசியுள்ளார் தென் பிராந்திய கடற்படைத் தளபதி சுஷில்.
டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற கோவை ஐஎன்எஸ் அக்ரானி கடற்படைப் பிரிவு வீரர்களுக்காக பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட அவரிம், இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தங்களை தாக்குவதாக தமிழக மீனவர்கள் கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு சுஷில் பதிலளிக்கையில்,
தமிழக மீனவர்களை குறிவைத்து இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை. எப்போதாவது ஏதாவது சிறுசில சம்பவங்கள் நடக்கலாம். ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை.
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் போது, அவர்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு எத்தேச்சையாக அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.
இலங்கை கடற்படையினரை கண்டு தமிழக மீனவர்கள் பயந்து ஓடுவதாலும், அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். விடுதலைப் புலிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகத்திலும் தாக்குதல் நடைபெறுகிறது.
இந்திய இலங்கை கடற்படையினரிடையே சுமூக உறவு நிலவுகிறது என்றார் சுஷில்.