வங்கதேசம், மியான்மரைத் தாக்கியது கிரி புயல்
டாக்கா: வங்கக் கடலில் உருவாகியிருந்த கிரி புயல் வங்கதேசம் மற்றும் மியான்மரை இன்று தாக்கியது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் ஒரிசாவுக்கு 65 கிலோ மீட்டர் தொலைவில் வங்காளதேசம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருந்தது. அது மேலும் வலுவாகி புயல் சின்னமாக மாறியது. அதற்கு கிரி என பெயர் சூட்டினர்.
இந்த கிரி புயல் நேற்று இரவு மியான்மரைத்தாக்கியது. பின்னர் வங்கதேசத்தையும் அது தாக்கியது. மியான்மரின் தெற்குப் பகுதியான சிட்வே, வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் ஆகிய பகுதிகளில் புயலால் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எட்டு மீட்டர் உயரத்திற்கு மேல் அலைகள் எழும்பிவருகின்றன. செயின்ட் மார்ச்சின் தீவு, டெக்னாப் ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
புயலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களையும், ஏராளமான படகுகளையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கிரி புயலால் தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மட்டும் காற்று பலமாக வீசும். வங்ககடலில் வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக சென்னை, எண்ணூர், நாகை, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 2 - ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
ஆனால், தமிழக மீனவர்கள் வழக்கம் போல் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.