For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணைக்கட்டு அதிமுக எம்எல்ஏ பாண்டுரங்கன் வெற்றி செல்லும்

Google Oneindia Tamil News

சென்னை: அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ பாண்டுரங்கன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டுத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் பாண்டுரங்கன். இவரை எதிர்த்து பாமக சார்பில் வரலட்சுமி என்பவர் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். வெற்றி வித்தியாசம் வெறும் 53 ஓட்டுக்கள்தான்.

இதையடுத்து வரலட்சுமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில்,

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில், எண்: 13, சின்னப்பள்ளி குப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. இரண்டாவது சுற்றில், முதலாவது டேபிளில் வைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டது. அந்த எந்திரத்தின் பொத்தானை அழுத்தியபோது எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே, அந்த எந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ணக்கூடாது என்று தேர்தல் பார்வையாளரிடம் நான் ஆட்சேபம் தெரிவித்தேன்.

அதையும் மீறி வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சின்னப்பள்ளி குப்பத்தில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பாதிக்கப்பட்டிருந்ததால் அதில் உள்ள வாக்குகள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு சாதகமாக கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டுரங்கன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் வரலட்சுமி.

வழக்கை நீதிபதி பானுமதி விசாரித்தார். பின்னர் நேற்று அவர் அளித்த தீர்ப்பு:

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் சின்னப்பள்ளி குப்பம் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

அதனால், குறிப்பிட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் மாற்றப்பட்டு உள்ளன என்ற பேச்சுக்கு இடமில்லை. அதோடு மட்டுமல்லாமல் பதிவான வாக்குகள் பற்றிய தகவல்கள் கட்டுப்பாட்டு கருவியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறி வரலட்சுமியின் வழக்கை தள்ளுபடி செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X