நரேந்திர மோடியின் பிரசாரம் பீகார் தேர்தலுக்குத் தேவையில்லை-சுஷ்மா
பீகார் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்கு மோடி வரவே கூடாது என்று கண்டிப்பாக கூறி விட்டார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். இதற்கு பாஜக ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் சரி என்று கூறி விட்டது.
இந்த நிலையில் தற்போது பீகாரில் 2 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. இன்னும் 4 கட்ட வாக்குப் பதிவு பாக்கி உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மோடி பிரசாரத்திற்கு வர மாட்டார் என்பதை சுஷ்மா சுவராஜ் சூசகமாக தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நரேந்திர மோடி பீகாரில் பிரசாரம் செய்யவில்லை. செய்யவும் மாட்டார். இது கட்சியின் முடிவு. நிதீஷ்குமார், சுஷில் மோடியின் மந்திரம் பீகாரில் சிறப்பாக வேலை செய்யும். அதேபோலத்தான் மோடியின் மந்திரம் குஜராத்தில் சிறப்பாக உள்ளது. அது எல்லா இடத்திலும் வேலை செய்யும் என்ற அவசியம் இல்லை. எனவே மோடியின் மந்திரம் பீகாருக்குத் தேவையில்லை.
மோடியைப் போலவே வேறு எந்த பாஜக முதல்வரும் பீகார் தேர்தலில் பிரசாரம் செய்ய அழைக்கப்படவில்லை.
பீகார் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தங்களது எதிர்பார்ப்புக்கேற்ற தலைவர்களையே தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். அந்த வகையில் பாஜக கூட்டணிக்கு பீகாரில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம் என்றார்.