இளைஞர் காங். தலைவர் ரூ. 6 லட்சத்துடன் கைது:சோனியா பேரணிக்கு கூட்டம் கூட்ட முயற்சி
பாட்னா: சோனியா காந்தி கலந்து கொள்ளும் பேரணிக்கு பணம் கொடுத்து கூட்டம் கூட்ட முயன்றதாகக் கூறி 2 காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. இன்று மூன்றாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதில் 48 தொகுதிகளில் வாக்குப்பதிவு
நடக்கிறது. இந்த தொகுதிகளில் தான் ராப்ரிதேவி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டுள்ளனர். இதனால் இன்று நடக்கும் வாக்குப்பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது.
கிழக்கு சம்பரான், மேற்கு சம்பரான் கோபால்கஞ்சி, சரன், வைசாலி மாவட்டங்களில் உள்ள இந்த தொகுதிகளில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட தொகுகள் உள்ளன. எனவே, இப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று ஒரு கோடியே 6 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.
இதற்கிடையில் இன்று பெகுசராயில் சோனியாவின் தேர்தல் பிரசார பேரணி நடப்பதாக இருந்தது. இதற்காக பணப் பட்டுவாடா செய்ய சில நிர்வாகிகள் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கினர். இந்த தகவல் அறிந்த போலீசார் அந்த ஹோட்டலில் திடீரென்று சோதனை நடத்தினர். இதில் அங்கு தங்கியிருந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாலன்குமார் மற்றும் சாகர் ரெய்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ. 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் செலவுக்காகத் தான் அவர்கள் பணம் வைத்திருந்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பணம் கொடுத்து பேரணிக்கு கூட்டம் கூட்ட முயன்றதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications