ராமமூர்த்தி, மூப்பனார் வளர்த்த காங்கிரஸை முடக்கி விட்டார் தங்கபாலு-இளங்கோவன்
சென்னை: வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனார் போன்ற தலைவர்கள் காங்கிரஸை முதன்மையான கட்சியாக மாற்ற கடுமையாக உழைத்தனர். ஆனால் தங்கபாலு கட்சியை முடக்கி வைத்து விட்டார் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
வாழப்பாடி ராமமூர்த்தியின் 8வது நினைவு நாளையொட்டி நேற்று ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது சிலைக்கு இளங்கோவன் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை முதன்மை கட்சியாக வளர்ப்பதற்கு ராமமூர்த்தி, மூப்பனார் போன்றவர்கள் பாடுப்பட்டனர். அவர்கள் தலைமை பொறுப்பு வகித்து வந்த போது துடிப்புடன் இருந்த காங்கிரஸ் கட்சியை தற்போதைய தலைவர் தங்கபாலு முடக்கி வைத்துள்ளார்.
விரைவில் தமிழக காங்கிரஸ் தலைமை மாறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்து தமிழகத்தில் அதை ஒரு வலுவான இயக்கமாக வளர்ப்பதற்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அதற்குரிய சரியான மாநில தலைமை எங்களுக்கு வேண்டும்.
திருமாவளவன் தூண்டுதலின் பேரில், ஈரோடு இளைஞர் காங்கிரஸ் சுரேஷ் தாக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவன் வன்முறையை தூண்டும் செயலை கைவிட வேண்டும். தான் செய்த குற்றத்தை மறைப்பதற்காக சோனியாவுக்கு திருமாளவன் கடிதம் எழுதியுள்ளார் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications