நான்கு வழிச்சாலைகளில் நெடுஞ்சாலை-லோக்கல் போலீசின் வசூல் வேட்டை

தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்தில் சிக்கும் நபர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விரைந்து தகவல் கொடுக்கவும் நெடுஞ்சாலை பாதுகாப்பு ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கென்று சிறப்பு வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஜீப்பில் இவர்கள் ஹாயாக நெடுஞ்சாலையில் ஊர் சுற்றுவதும், வழியில் உள்ள கடைகள்-ஹோட்டல்களில் ஓசியில் சாப்பிட்டுவிட்டு, முடிந்தால் மாமூலும் வசூலிப்பதும், வாகன சோதனை என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பதும் தான் இவர்களுக்கு முக்கிய வேலையாக உள்ளது. மற்றபடி இவர்களால் நெடுஞ்சாலைக்கோ அதில் பயணிப்பவர்களுக்கே ஒரு பயனும் இல்லை என்பதே உண்மை.
வழிப்பறிக் கொள்ளையர்களை விட மோசமான இந்த போலீசாரின் தொல்லை மதுரை-மேலூர் பகுதியில் மிக மிக அதிகம். வண்டிகளை நிறுத்தி சோதனை என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் இவர்களது செயல்களால் பொது மக்கள் பெரும் எரிச்சலில் உள்ளனர்.
மேலும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு போட்டியாக மேலூர் போக்குவரத்து போலீசாரும் களத்தில் இறங்கி தனியாக வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.
நான்கு வழிச் சாலைகளை பயன்படுத்த நூற்றுக்கணக்கில் டோல் செலுத்தி தான் வாகனங்கள் இயங்குகின்றன. அது தவிர இவர்களுக்கும் பணம் தர வேண்டும்.
இதுகுறித்து அதிக புகார்கள் குவியவே தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை 6 மணியளவில் வாடகை காரில் மதுரையிலிருந்து மேலூர் நோக்கி சென்றார்.
நான்கு வழிச் சாலையில் கூத்தப்பன்பட்டி பாலம் அருகே சென்றபோது, அங்கு பணியில் இருந்த நெடுஞ்சாலை பாதுகாப்பு ரோந்து படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டுரங்கன், ரோந்து வேன் டிரைவர் மாணிக்கம், ஏட்டுகள் பாண்டி, மணிமாறன் போலீஸ்காரர்கள் சுல்தான் அலாவூதின், சதீஷ்குமார் ஆகியோர் ஐ.ஜியின் சென்ற காரை மறித்தனர்.
இதையடுத்து ஐ.ஜி. தனது கார் டிரைவரை மட்டும் அவர்களிடம் அனுப்பி வைத்தார். லைசென்ஸ் மற்றும் பல ஆவணங்களை அவர்கள் கேட்க, அதையெல்லாம் டிரைவர் கொடுத்தார். ஆனாலும் அவரிடம் போலீசார் பணம் கேட்டனர்.
இதைத் தொடர்ந்து ஐ.ஜி. இறங்கி வந்து 7 பேருக்கும் டோஸ் விட்டுவிட்டு கிளம்பினார்.
அவரது கார் சிறிது தூரம் சென்ற நிலையில் மேலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் அவரது டீம் வண்டிகளை நிறுத்தி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தது.
அவர்களையும் பிடித்த ஐ.ஜி உடனடியாக மேலூர் துணை எஸ்பி விஜயபாஸ்கரனை அங்கு வரவழைத்து அவரிடம் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
நெடுஞ்சாலை போலீசார் மற்றும் மேலூர் போலீசார் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி மனோகருக்கும் ஐ.ஜி. உத்தரவிட்டார்.
அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications