இந்தோனேஷியாவில் மீண்டும் எரிமலை வெடித்தது: பூகம்ப பலி 394-ஆக உயர்வு
ஜகர்தா: இந்தோனேசியாவில் மெராபி எரிமலை மீண்டும் வெடித்தது.
இந்தோனேசியாவில் கடந்த திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் இது வரை 394 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300 பேரைக் காணவில்லை. சாவு எண்ணிக்கை 600-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மர உச்சியில் மீட்கப்பட்ட குழந்தை:
சுனாமி பேரலையில் சிக்கி பல வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகினர். அவர் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சுனாமி அலையால் வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ஒன்று மரத்தின் உச்சியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. இதே போன்று மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனும் பத்திரமாக மீட்கப்பட்டான். ஆனால் அவன் பெற்றோர் பேரலையில் சிகக்கி உயிர் இழந்தனர்.
சுனாமிக்கு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு கும்பல் கும்பலாக அடக்கம் செய்யப்படுகின்றது. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்நாட்டின் ஜாவா பகுதியில் உள்ள மௌன்ட் மெராபி எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் 34 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அந்த எரிமலை நேற்று மீண்டும் வெடித்து நெருப்புக் குழம்பைக் கக்கியது. இதையடுத்து இப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆசியான் நாடுகளின் கூட்டம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ள வியட்நாம் சென்றுள்ள இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பம்பாஸ் யுதோ யோனோ அங்கிருந்தே மீட்பு பணிகளை கவனித்து வருகிறார்.
கூட்டம் முடிந்தவுடன் தாயகம் திரும்பி இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் என்று அவரது செய்தி தொடர்பாளர் ஜூலி யன் பாஷா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications