நவம்பர் தேர்தலுக்கு பிறகு ஆங்சான் சூகி விடுதலை: வெளியுறவு அமைச்சர் நியான் வின்
ராணுவ ஆட்சியின் பிடியில் உள்ள மியான்மரில் முக்கிய எதிர் கட்சித் தலைவரான ஆங் சான் சூகி கடந்த 15 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் உள்ளார். இவர் அமைதிக்கான நேபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மியான்மரில் அடுத்த மாதம் 7-ம் தேதி பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட சூகியை தேர்தல் முடிந்த பிறகு விடுதலை செய்யப் போவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நியான் வின் தெரிவித்தார். ஆனால் சூகியை விடுதலை செய்யும் தேதியை அவர் குறிப்பிடவில்லை.
இந்த்த தேர்தலே ஒரு கண் துடைப்புதான் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
வியட்நாம் நாட்டில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற நியான் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் சூகியை தேர்தலுக்கு முன் விடுவிக்குமாறு வலியுறுத்தினர்.
கடந்த 1962-ம் ஆண்டில் இருந்து மியான்மாரில் ராணுவ ஆட்சி தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.