முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர், போதை பொருள் கடத்தல் வழக்கிலும் கைது
சென்னை: கொள்ளையனாக மாறி, நகைகளுடன் தப்பிக்கும்போது பிடிபட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ ரவிசங்கர் போதைப் பொருள் கடத்தல் வழக்கிலும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதியின் திமுக சார்பில் 2001-ல் வெற்றி பெற்றவர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர். இவர், சென்னையில் அசோக்நகர் பகுதியில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளை அடித்தபோது கையும் களவுமாக சிக்கினார். அதைத் தொடர்ந்து இவரை போலீசார் கொள்ளை வழக்கில் கைது செய்தனர்.
விசாரணையில், இவர் மீது தமிழகம் முழுவதும் ஏகப்பட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. சென்னையில் உள்ள வழக்குகள் தொடர்பாக ரவிசங்கரை சென்னை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
ரவிசங்கரை மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு போலீசார் 2003-ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்திருந்தனர். மண்ணடியில் ஓட்டல் ஒன்றில் 1,500 கிராம் ஹெராயினை கடத்த முயற்சித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 2 ஆயிரத்து 150 கிராம் ஹெராயினை பிடித்தனர். மேலும் அவரின் கூட்டாளிகள் வெங்கடேஷ், ரகு, சங்கர், அர்ஜுன் ஆகியோரிடம் இருந்தும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. மொத்தத்தில் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 4 ஆயிரத்து 200 கிராம் ஹெராயினின் மதிப்பு, சர்வதேச சந்தையில் ரூ.4.20 கோடியாகும்.
இந்த வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சென்னை போதைப் பொருள் தடுப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு மதுரையில் வேறொரு வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு கொண்டு செல்லும்போது ரவிசங்கர் தப்பி ஓடிவிட்டார். எனவே அவர் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த வெங்கடேஷ் இறந்துவிட்டார். மற்றவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில், வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவிசங்கரை போதைப் பொருள் வழக்கிலும் போலீசார் கைது செய்துள்ளனர். அதற்கான பிடிவாரண்டு பெற்று அவரை சென்னை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி கலாவதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை நவம்பர் 12-ந் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications