ரூ 15 கோடியில் சுய உதவிக்குழு பொருள் விற்பனை வளாகம்!
சென்னை: சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பதற்கென்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரூ 15 கோடியில் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் கருணாநிதி.
சுயஉதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதற்கு மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் வணிக வளாகங்கள் கட்ட நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் ரூ.15 கோடியே 33 லட்சம் செலவில் புதிதாக ஒரு வளாகம் கட்டப்பட்டுள்ளது.
அன்னை தெரசா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நினைவாக இக்கட்டடத்துக்கு 'அன்னை தெரசா மகளிர் வளாகம்' என பெயர் சூட்டியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடும் வகையில் நிரந்தர விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மகளிர் மேம்பாட்டிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் இயங்கி வரும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம், திட்ட அலுவலகம் ஆகியவை இந்த வளாகத்தில் செயல்பட உள்ளன.
அன்னை தெரசா மகளிர் வளாக திறப்பு விழா இன்று மாலை 5 மணியளவில் நுங்கம்பாக்கம் மகளிர் வளாகத்தில் நடக்கிறது.
விழாவிற்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். முதல்வர் கருணாநிதி மகளிர் வளாகத்தை திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications