2 லட்சம் அரசுக் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப கோரிக்கை
நெல்லை: தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி வருமாறு,
தமிழக அரசு நியமித்த ஒருநபர் குழு அறிக்கையில் சில குறைபாடுகள் உள்ளன. மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதம் பெறாத நிலை தமிழகத்தில் சில பிரிவு பணியாளர்களுக்கு உள்ளது.
செவிலியர்களின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றியது போல் பாதிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆய்வக உதவியாளர்கள், உதவி புள்ளியியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கையையும் மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். சாலை பணியாளர்களை செமி ஸ்கில்டு நிலைக்கு உயர்த்தி உயர் ஊதிய விகிதம் வழங்க அரசு உத்தரவி்ட்டும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
ஊதிய விகித குறைபாடுகளை அரசு தீர்ப்பதோடு மத்திய அரசுக்கு இணையான வீட்டு வாடகை, கல்வி, போக்குவரத்து படிகளை வழங்க முன் வரவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம பணியாளர்கள், ஊராட்சி உதவியாளர்களுக்கு நி்ரந்தர கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு விடுப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். மருத்துவம், பொது சுகாதார துறை ஊழியர்களுக்கு 10 மாதமாக ஊதியம் வழங்காத நிலை உள்ளது. உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. உடனடியாக இவற்றை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.