இராக் தேவாலயத்தில் தீவிரவாதிகள் அட்டூழியம்: பாதிரியார்கள், போலீசார் உள்பட 58 பேர் பலி
பாக்தாத்: பாக்தாதில் தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 2 பாதிரியார்கள், 17 போலீசார் உள்பட 58 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பாக்தாதின் மத்தியப் பகுதியில் உள்ள பங்குச் சந்தை வளாகத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு முகமூடி அணிந்த தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரின் முழு கவனமும் இங்கு திரும்பியது. தீவிரவாதிகளை சுட்டு்க் கொல்ல பெரும்பாலான படையினர் இங்கு விரைந்தனர்.
இவ்வாறு பாதுகாப்புப் படையினரை திசை திருப்பிவிட்ட தீவிரவாதிகள், சிறிது தொலைவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்துக்குள் நுழைந்து இரவு ஆராதனையை நடத்திக் கொண்டிருந்த 2 பாதிரியார்களை சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த சுமார் 130 பேரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.
இதையடுத்து அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. சிறைகளில் உள்ள சில முக்கிய தீவிரவாதிகளை விடுவித்தால் தான் பிணைக் கைதிகளை விடுவிப்போம், அல்லது அனைவரையும் சுட்டுக் கொல்வோம் என்று தீவிரவாதக் கும்பல் மிரட்டது.
ஆனால், அரசு அவர்களது கோரிக்கையை ஏற்காமல், பிணைக் கைதிகளை மீட்க பாதுகாப்புப் படையினரை தேவாலயத்திற்குள் அனுப்பியது.
தீவிரவாதிகள் மீது ஒரே நேரத்தில் வான், தரைவழியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் பிணைக் கைதிகள் 58 பேர் உயிரிழந்தனர். அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனரா அல்லது இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் அவர்கள் உயிரிழந்தனரா என்று தெரியவில்லை.
மோதலில் 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய தி இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தீவிரவாதிகள் தேவாலயத்துக்குள் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்ததால் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக, அரசு தெரிவித்துள்ளது.
இந்த பிணைக் கைதிகளை மீட்க அமெரிக்க ராணுவம் நேரடியாக ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந் நாட்டின் பாதுகாப்புப் பணி இந்த ஆண்டு துவக்கத்தில் இராக் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது இராக்கில் 50,000 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
இராக்கில் 1980ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2.89 சதவீத கத்தோலிக்க கிருஸ்துவர்கள் இருந்தனர். 2008ம் ஆண்டு இது 0.89 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
சமீபத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராக்கின் முன்னாள் துணை அதிபர் தாரிக் அஜீசும் கிருஸ்துவரே. இஸ்லாமியப் பெயர் கொண்டிருந்தாலும் கிருஸ்துவரான அவருக்கு முக்கியப் பதவிகளைத் தந்தார் அமெரிக்காவால் தூக்கில் இடப்பட்ட அதிபர் சதாம் ஹூசேன். அவரது ஆட்சியில் அனைத்து மதத்தினருக்கும் சம வாய்ப்பு தரப்பட்டது. அதே நேரத்தில் ஷியா பிரிவு முஸ்லீம்களை ஒடுக்கி வைத்திருந்ததார் என்பதும் குறிப்பிடத்தக்கது.