பணவீக்க நெருக்கடி... வட்டி வீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியது ரிசர்வ் வங்கி!

இன்று காலை இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் வங்கிகளுக்கு தரப்படும் கடனுக்கான வட்டி வீதம் (ரெபோ) 25 புள்ளிகள் உயர்ந்து 6.25 சதவீதமாகவும், வங்கிகளின் வைப்புத் தொகைக்கு (ரிவர்ஸ் ரெபோ) தரப்படும் வட்டி 5.25 சதவீதமாகவும் இருக்கும்.
ரொக்க இருப்பு விகிதத்தில்- சிஆர்ஆர்- எந்த மாற்றமும் இல்லை. 6 சதவீதமாகவே தொடர்கிறது.
நாட்டின் பொதுப் பணவீக்கம் 8.62 சதவீதமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் இது மைனஸில் இருந்தது நினைவிருக்கலாம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8.5 சதவீதத்திலிருந்து 9 சதவீதத்துக்குள் நிலைப்படுத்த வேண்டுமானால் இந்த பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்தாக வேண்டியது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். எனவே பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடி கருவியான வட்டி வீத உயர்வை கையிலெடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.
ஆசிய நாடுகளிலேயே வட்டி வீதத்தை பயன்படுத்தி பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியாகியுள்ள 'பேரியல் பொருளாதாரம் மற்றும் பணவியல் விவகாரங்கள்' குறித்த அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த ஆண்டு ஏற்கெனவே 5 முறை வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிதியமைச்சரைச் சந்தித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ். இந்த சந்திப்புக்குப் பின் சிஆர்ஆர் தவிர்த்து, அனைத்து வட்டி வீதங்களையும் மேலும் ஒருமுறை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications