'தர்மம் ஒருநாள் வெல்லும்'-ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து!
சென்னை: தர்மம் ஒருநாள் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் நாள் தான் தீபாவளித் திருநாள் எனறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையான இன்பம் பொங்கும் தீபாவளித் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் என் இனிய தமிழக மக்களுக்கு தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபாவளிப் பண்டிகையின் அடிப்படையே தீய சக்திகள் விலகி, தனி மனிதர் வாழ்க்கையில் அமைதியும், சுபிட்சமும் ஏற்படுவதற்கான துவக்கம். எங்கும் ஒளி பிறந்து, அறியாமை, அகங்காரம், கோபம் போன்ற எதிர் குணங்கள் அழிய வேண்டும் என்பதே தீப ஒளி ஏற்றி கொண்டாடுவதன் பொருள்.
இறைவனுக்கு மகனாக இருந்தாலும், சில வரையறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் ஒருநாள் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் நாள் தீபாவளித் திருநாள்.
இந்த நன்னாளில் தீய சக்திகள் நீங்கி, தமிழர்களின் தாகமெல்லாம் தீர்ந்து, தரணியில் அனைத்து மக்களும் ஒற்றுமையாய், அமைதியுடன் வாழ்வதற்குரிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து, அனைத்து மக்களின் வாழ்விலும் ஒளி பிறக்க வேண்டும் என்று வாழ்த்தி, எனது தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆளுநர் பர்னாலா:
ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீப ஒளியான தீபாவளியை கொண்டாடும் மக்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அறியாமை எனும் இருளை போக்கட்டும். சகோதரத்துவத்தையும், அன் பையும் மேம்படுத்தட்டும் என்று கூறியுள்ளார்.