போர் குற்றம்; கைது பயம்: லண்டன் பயணத்தை கைவிட்ட ராஜபக்சே

ஆக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற லண்டனுக்குச் செல்ல இருந்தார் ராஜபக்சே. ஆனால், அவரது வருகைக்கு எதிராக லண்டனில் இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போர்க் குற்றவாளியான ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுக பல மனித உரிமை அமைப்புகளும் தயாராயின. உலகி்ன் எந்தப் பகுதியில் போர்க் குற்றம் நடந்தாலும், இங்கிலாந்து சட்டப்படி போர்க் குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சே கைதாக வாய்ப்புள்ளதாக இலங்கை உளவுப் பிரிவினரும் சட்ட நிபுணர்களும் எச்சரித்ததையடுத்து தனது பயணத்தை அவர் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார்.
கடந்த 1998ம் ஆண்டில் சிலி நாட்டு முன்னாள் அதிபர் அகஸ்டோ பினோசெட்டை இங்கிலாந்து போலீசார் கைது செய்தது நினைவுகூறத்தக்கது. தனது 17 ஆண்டு ராணுவ ஆட்சியில் ஏராளமான ஸ்பெயின் நாட்டவரை கொன்று குவித்தார் பினோசெட் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு, உளவுத்துறை அமைச்சர்கள் இங்கிலாந்துக்கள் காலடி எடுத்து வைத்தால் அவர்களை கைது செய்யலாம் என்று இங்கிலாந்து நீதிமன்றங்கள் வாரண்ட் பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையி்ல் தான் ராஜபக்சே தனது இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அதே போல லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி பிரசன்ன டி சில்வாவை திரும்பப் பெறுமாறும் இங்கிலாந்து கூறியுள்ளதாகத் தெரிகிறது. தமிழர்களுக்கு எதிரான ராணுவக் கொடுமைகளை நடத்தியதில் இவருக்கும் முக்கிய பங்குண்டு.












Click it and Unblock the Notifications