கோவை அருகே 7ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற 2 பேர் கைது
கோவை: கோவை அருகே 7ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திச் செல்ல முயன்ற 2 வாலிபர்களை பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பள்ளிக் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. அன்மையில் தான் கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளும், மகனும் கடத்திக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பள்ளி மாணவியை மீண்டும் கடத்த முயற்சி நடந்துள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோளம்பாளையம் மேல்பாதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி நேற்று முன் தினம் காலை சாலை அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் சுள்ளி பொறுக்கி கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக வந்த கார் திடீர் என்று சாலையோரம் நின்றது. அதில் இருந்த 2 வாலிபர்கள் கீழே இறங்கினர். சாலையோரம் சிறுநீர் கழிக்கச் சென்ற அவர்கள் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த மாணவியை பார்த்துவிட்டு காட்டுக்குள் சென்றனர்.
அவள் அறியாதவாறு பின்னால் சென்று வாயைப் பொத்தி கடத்த முயன்றனர். அதையும் மீறி அந்த மாணவி போட்ட கூச்சலைக் கேட்டு அவளின் தந்தை மற்றும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைப் பார்த்த அந்த வாலிபர்கள் மாணவியை விட்டுவிட்டு தப்ப முயன்றனர். அவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காரமடை போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தைச் சேர்ந்த நிசார் (33), ராஜேஷ் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications