சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடர்-நாளை தொடக்கம்
சென்னை: சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய சட்டமன்ற வளாகத்தில் நடக்கும் இக் கூட்டத் தொடரின்போது, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் எந்தெந்த நுழைவு வாயில் வழியாக வந்து செல்ல வேண்டும் என்ற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமை கொறடா, சட்டப்பேரவைக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அண்ணா சாலை பெரியார் சிலை அருகே உள்ள வாயில் வழியாக பேரவைக்குள் வரலாம்.
எம்எல்ஏக்கள், அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் ஆகியோர் சிவானந்தா சாலையில் உள்ள வாயில் வழியாக நுழைந்து வரலாம்.
ராஜாஜி மண்டபத்தின் பின்புறம் உள்ள இடத்தில் அவர்களது வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்களின் வாகன அனுமதி அட்டையை செயலாளர் அறையிலும், உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள செயலகப் பிரிவுகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
சட்டப்பேரவை உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ள உறுப்பினர்கள், இந்தியன் வங்கி அருகேயுள்ள வாயில் வழியாக பேரவைக்குள் வரலாம்.
சட்டப்பேரவை நடவடிக்கைகளை பார்க்க வரும் பொதுமக்கள், அண்ணா சிலைக்கு அருகில் உள்ள வாலாஜா சாலை சட்டப்பேரவை வாயில் வழியாக உள்ளே வர வேண்டும்.
அவர்களுக்கான நுழைவு அனுமதிச் சீட்டு, சட்டப்பேரவை பொதுமக்கள் வளாகத்தின் முன் வாயிலிலே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவைச் செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இக் கூட்டத் தொடரில் சட்டம் ஒழுங்கு, விலைவாசி, குழந்தைகள் கடத்தல் ஆகிய பிரச்சனைகளை எதிர்க் கட்சிகள் கிளப்பவுள்ளன.