ஆபாச படம் எடுத்து மிரட்டல்: மேலும் 20 பேர் புகார்
திருவனந்தபுரம்: பெங்களூர்-மைசூர் செல்லும் கேரள சுற்றுலாப் பயணிகளை மிரட்டி நிர்வாண புகைப்படம் எடுத்து பணம் பறித்த கும்பலிடம் ஏராளமானோர் பணம் பறிகொடுத்தது தெரிய வந்துள்ளது.
கோழிக்கோட்டை சேர்ந்த வாலிபரை இந்த கும்பல் புளூபிலிம் எடுத்து ரூ.10 லட்சம் பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெங்களூருக்கு சுற்றுலா சென்றனர். பெங்களூர் ஏலஹங்கா பகுதியில் உள்ள நண்பரி்ன் வீட்டில் தங்கியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை மிரட்டி சில பெண்களுடன் நிர்வாணமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தது. அதை காட்டி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது. ஊருக்கு சென்று பணம் எடுத்து தருவதாக அவர்களிடம் கூறிவிட்டு 4 பேரும் தப்பி வந்தனர். தொடர்ந்து செல்போனில் அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டி வந்தது.
இது குறித்து 4 பேரும் மலப்புரம் சங்கரன்குளம் போலீசில் புகார் செய்தனர். பணம் தருவதாகக் கூறி போலீசார் அந்த கும்பலை தந்திரமாக கேரளாவுக்கு அழைத்தனர். பணம் வாங்க மலப்புரம் வந்த 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மைசூர் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த யூசுப் மற்றும் மதிக்கேரி மாவட்டத்தைச் சேர்ந்த யாக்கூப் என தெரிய வந்தது.
இவர்கள் இருவரையும் மலப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் பிடிப்பட்ட செய்தியை அறிந்ததும் ஏராளமானோர் இதுபோல் தாங்களும் ஏமாந்ததாக தெரிவித்துள்ளனர்.
மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சங்கரன்குளம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒரு வாலிபர் அளித்த புகாரில் தன்னை அந்த கும்பல் கடத்திச் சென்று புளூபிலிம் எடுத்து ரூ. 10 லட்சம் பணம் பறித்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி பெங்களூர் போலீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கைதான 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications