மல்லிகை பூ விலை கடும் உயர்வு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வரலாறு காணாத அளவுக்கு மல்லிகைப் பூவின் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.1000க்கு விற்பனையானது. தீபாவளி வரையில் கிலோ ரூ.600 வரை விற்பனையானது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால் மல்லிகைப் பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை-ராமநாதபுரம், தேனி-தோவாளைக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. இங்கு சாகுபடியாகும் மல்லி, பிச்சி, கனகாம்பரம், கேந்தி, சம்பங்கி, கொண்டை, ரோஸ், காக்கட்டன் ரக பூக்கள் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் அருகே பூ மொத்த விற்பனை கமிஷன் கடைகள் அமைந்துள்ளன. தற்போது இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் குளங்கள் வறண்டு விட்டதுடன் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் தண்ணீரின்றி விவசாயிகள் மலர் சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர். எனவே சமீபகாலமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு முன்பு முகூர்த்த காலங்களில் மட்டும் உயர்ந்த பூக்களின் விலை தற்போது சாதாரண நாட்களிலும் ஏறுமுகத்திலேயே உள்ளது. நவராத்திரி விழா மற்றும் தீபாவளியின்போது பூக்கள் விலை சற்று உயர்ந்தது. தீபாவளி வரையில் மல்லிகை கிலோ ரூ.600க்கு விற்றது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவில் பூ மார்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்து மிகவும் குறைந்தது. வரத்து குறைவாலும் தேவை அதிகமாக இருந்ததாலும் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1000க்கு விற்பனையானது.












Click it and Unblock the Notifications