திருடனிடம் சிக்கிய காவலரைக் காக்க முயன்ற ராணுவ வீரர் கத்திக் குத்துப்பட்டு பலி
பெங்களூர்: பெங்களூர் ரயில் நிலையத்தில் கத்தியுடன் ஒரு திருடனைப் பிடித்த ரயில்வே போலீஸ்காரர் அவனிடம் சிக்கிக் கொண்டார். அவரைக் காக்க முயன்ற ராணுவ வீரர், திருடனால் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு திருடன் கத்தியுடன் வந்தபோது அவனைப் பார்த்து விட்ட ராமச்சந்திரா என்ற ரயில்வே போலீஸ்காரர், திருடனைப் பிடிக்க முயன்றார். அப்போது திருடனிடம் அவர் சிக்கிக் கொண்டார்.
இதைப் பார்த்த அங்கு வந்த ராணுவ வீரரான நவதீந்தர் சிங் (32) என்ற ராணுவ வீரர், காவலரைக் காக்க முயன்றார். திருடனை அடித்து பிடிக்க முயன்றபோது திருடன் திடீரென ராமச்சந்திராவை விட்டு விட்டு சிங் மீது பாய்ந்தான். தன்னிடமிருந்த கத்தியால் சரமாரியாக சிங்கை குத்தி விட்டான்.
இதில் படுகாயமடைந்த சிங் பரிதாபமாக உயிரிழந்தார். திருடனால் ஏற்கனவே தாக்கப்பட்ட ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பெங்களூரில் உள்ள ராணுவ சேவை கார்ப்ஸ் மையத்தில் பயிற்சிக்காக வந்திருந்தார் சிங். அவர் பஞ்சாபைச் சேர்ந்தவர். ராணுவத்தில் அவர் என்ன தகுதியில் இருந்தார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
இதேபோன்ற சம்பவம் திருச்சி அருகே முக்கொம்பு என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. அங்கு ஒரு தம்பதியை கத்தி முனையில் ஒரு திருடன் மிரட்டி நகையைப் பறிக்க முயன்றபோது ஒரு ராணுவ வீரர் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அந்த திருடன் ராணுவ வீரரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் அந்த ராணுவ வீரர் உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.
பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் பெங்களூர் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.