சென்னையை மிரட்டிய ஜல் புயல் வலுவிழந்த நிலையில் எண்ணூரில் கரையைக் கடந்தது

புயல் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், நெல்லூர் மாவட்டத்திலும் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
திங்கள்கிழமை அதிகாலையில் புயல் கரையைக் கடந்தது. இருப்பினும் அது வலுவிழந்த நிலையில் கடந்ததால் பெரும் சேதம் ஏற்படவில்லை.
புயல் கரையைக் கடந்தபோது அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியிருந்தது. கரையைக் கடந்த பின்னர் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி ராயலசீமா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அறிக்கை கூறுகையில்,
ராயலசீமா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ள புயல் மேலும் பலவீனமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் தொடர்ந்து நகரும்.
இதன் காரணமாக தெற்கு உட்புற மற்றும் கடலோர கர்நாடகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:
ஜல் புயல் கரையைக் கடந்தபோதிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கிக் கிடப்பதாலும், சாலைகளில் சேதம் ஏற்பட்டிருப்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் உட்பட 11 மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதேசமயம் இன்று காலை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறையை ரத்து செய்வது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவெடுக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications