மியான்மர் தேர்தல்: கிடைக்குமா உண்மையான ஜனநாயகம்?
யாங்கூன்: மியான்மரில் தேர்தல் நடந்து விட்டது. ஆனால் உண்மையான ஜனநாயகம் அங்கு தழைத்தோங்குமா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.
1990ம் ஆண்டு மே 27ம் தேதி ஒரு பொம்மைத் தேர்தலை நடத்தியது மியான்மர் ராணுவ ஆட்சி. அதன் பின்னர் நேற்றுதான் மீண்டும் தேர்தல் நடந்தது. இதில் 2.9 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
தேர்தலை நடத்தி முடித்திருப்பதன் மூலம் மியான்மர், ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாக பலரும் நம்புகின்றனர். ஆனால் 1962ம் ஆண்டிலிருந்து ராணுவத்தின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் மியான்மரில், ஜனநாயகத் தலைவி ஆங் சான் சூகியி இல்லாமல் ஜனநாயகம் எப்படி முழுமை பெறும் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
இதை இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவே மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். நேற்று மும்பை டவுன் ஹால் கூட்டத்தில் அவர் பேசுகையில், மியான்மர் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஜனநாயகத் தலைவர் ஆங்சான் சூகியியை மியான்மர் ராணுவ சர்வாதிகார அரசு விடுவிக்க வேண்டும் என்று கூறினார் ஒபாமா.
அவர் சொன்னதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆங்சான் சூகியியை தொடர்நது சிறையில் அடைத்து வைத்து விட்டு தேர்தலை நடத்துவதாக கூறி உலக மக்களின் கண்களில் டன் கணக்கில் மண்ணை அள்ளிப் போட்டு ஏமாற்றப் பார்க்கிறது மியான்மர் ராணுவ அரசு.
நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகியி கடந்த 20 வருடங்களாக வீட்டுக் காவலில் அடைபட்டுள்ளார். நேற்று நடந்த தேர்தலை புறக்கணிக்கும் அழைப்புக்கு அவர் ஆதரவும் தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில்தான் நேற்று மியான்மர் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் யூனியன் சாலிடாரிட்டி மற்றும் வளர்ச்சிக் கட்சி 1159 சீட்களுக்கு 1112 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இது போக 14 பிராந்திய அவைகளின் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட்டது.
அதேபோல தேசிய ஒற்றுமைக் கட்சி 995 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இக்கட்சிக்கு மியான்மரின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
மிகப் பெரிய எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக சக்திக் கட்சி 164 இடங்களில் மட்டுமே போட்டியிட்டிருந்தது.
இந்தத் தேர்தல் உண்மையிலேயே ஜனநாயகப் பாதைக்கான முதல் படிக்கட்டா அல்லது இன்னும் ஒரு 'டுபாக்கூர்' தேர்தலா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications