பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்: பாராமுகத்தில் பள்ளி நிர்வாகம்
புதுக்கடை: பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் பள்ளி நிர்வாகம் அமைதியாக இருப்பது பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அனந்தமங்கலம் என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இங்கு பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
ஏதாவது ஒரு பொருளை கீழே போட்டுவிட்டு மாணவியை எடுக்க சொல்வாராம். குனி்ந்து எடுக்கும்போது அவர் அந்த மாணவியை பிடித்து தூக்கி விடுவாராம். இது தவிர பல்வேறு சில்மிஷ வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறாராம். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியரை விசாரித்தபோது தான் மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் நடந்து கொள்வதால் இதை பிடிக்காத மாணவிகள் தன்மீது அபாண்டமாக பழி போடுகிறார்கள் என்று கூறி தப்பியுள்ளார்.
கடந்த 3 தினங்களுக்கு முன் மேலும் 2 மாணவிகளிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு உள்ளார். பதறிப் போன மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
பெற்றோர்கள் மீண்டும் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி போலீசில் புகார் செய்ய நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நலன் கருதி மவுனமாக உள்ளனர். ஆசிரியரின் இந்த சில்மிஷம் அந்த பகுதி பொதுமக்களுக்கும் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியள்ளனர். யாரும் புகார் செய்யாததால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளனர்.












Click it and Unblock the Notifications