வங்கி மோசடி வழக்கு-முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
நெல்லை: விளாத்திகுளம் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கரை நெல்லை நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர். அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் விளாத்திகுளம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கித் தலைவராகவும் இருந்தார்.
பதவி காலத்தில் அந்த வங்கியில் ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக தூத்துக்குடி வணிக புலனாய்வு குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணையின்போது ஆஜர்படுத்த கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி போலீசார் ரவிசங்கரை நெல்லை கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு உறவினர் வீ்ட்டுக்கு சென்ற ரவிசங்கர் போலீசாரை ஏமாற்றி விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்.
இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து 6 ஆண்டுகளாக அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் வருமான வரிதுறை அதிகாரி போல் நடித்து கொள்ளையடிக்க முயன்றபோது ரவிசங்கர் போலீசில் சிக்கினார்.
இதையடுத்து விளாத்திகுளம் கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றம் ரவிசங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன் அடிப்படையில் போலீசார் ரவிசங்கரை சென்னையில் இருந்து நெல்லைக்கு அழைத்து வந்து 2-வது மாஜிஸ்திரேட் ராபின்சன் ஜார்ஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை இன்று நடக்கிறது.
எனவே சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ரவிசங்கரை அழைத்து வந்து இன்று காலை நெல்லை 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications