தூதுவளை மிட்டாய் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்பு மண்டலம் பாதிப்பு
நெல்லை: தூதுவளை மிட்டாய் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை சந்திப்பு புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் மிட்டாய் கடைகளில் சமீபகாலமாக தூதுவளை மிட்டாய் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் ஒருவித மருத்துவ பொருள் சேர்க்கப்படுவதால் பலர் இதை வாங்கி சாப்பிடுகின்றனர்.
சாக்லெட் போல் இனிக்கும் பொருள் என்பதால் குழந்தைகளும் இதை அதிகம் வாங்கி சாப்பி்ட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக இதை வாங்கி சாப்பிட்டு வந்த குழந்தைகள் ஒருவித மயக்கத்துடன் நரம்பு மண்டல பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் நெல்லை தனியார் மருத்துவமனையில் கை, கால், கழுத்து உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த 3 குழந்தைகள், கடையநல்லூரைச் சேர்ந்த 9 குழந்தைகள், கோவில்பட்டியைச் சேர்ந்த 2 குழந்தைகள் தற்போது நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூதுவளை மி்ட்டாய்களை ஆயுர்வேத மருந்து என விற்பனை செய்வதால் மாநகர சுகாதார அதிகாரிகள் இதன் விற்பனையைத் தடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். உணவுப் பண்டம் என விற்பனை செய்தால் மட்டுமே தூதுவளை மிட்டாயை பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications