சென்னை அரசு மருத்துவமனையில் விபத்து: 4-வது மாடியில் இருந்து விழுந்த தந்தை பலி, மகன் உயிர் ஊசல்
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் 4-வது மாடியில் இருந்த கழிப்பறைக்குச் சென்ற தந்தை, மகன் தவறுதலாக பாதாள அறையில் நுழைந்து விழுந்ததில் தந்தை இறந்துவிட்டார், மகன் ஆபத்தான நிலையில் உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமி பட்டி அய்யனார் குளத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி (60). இவரது மகன் கருப்பசாமி (35). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் மதுரையில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தியாகராய நகரில் உள்ள சித்த மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்றுமாலை அவர் திடீர் என்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்தவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரின் நிலை மோசமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் நேற்றிரவு 8.30 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை 2-வது டவர் பிளாக் 4-வது மாடியில் உள்ள சிறுநீரக சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவரைப் பார்த்துக் கொள்வதற்காக அவரின் தந்தை உடனிருந்தார்.
இரவு 11.30 மணி அளவில் கருப்பசாமி வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரை அழகர்சாமி கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த தளத்தில் 10 கழிவறைகள் உள்ளன. அதே தளத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்புக்காக 4-வது மாடியில் இருந்து தரைத்தளம் வரை பாதாள அறை ஒன்றும் உள்ளது.
அது இருட்டாகவும், கதவு பூட்டப்படாமலும் இருந்தது. இதனால் அவர்கள் கழிவறை என்று நினைத்து பாதாள அறைக்குள் நுழைந்தனர். இதில் இருவரும் தரை தளத்தில் விழுந்தனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டனர். இதில் அழகர்சாமி இறந்துவிட்டார். ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ள கருப்பசாமி தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தை அடுத்து தற்போது அந்த பாதாள அறை மூடப்பட்டுள்ளது. மேலும், அங்கு எச்சரிக்கை வாசகமும் வைக்கப்பட்டுள்ளது.