கூகுள் - பேஸ்புக் மோதல்.... ஊழியர்களுக்கு லாபம்!!
கலிபோர்னியா: பேஸ்புக்கின் வளர்ச்சி மற்றும் அணுகுமுறை இணையதள ஜாம்பவான் கூகுளை ரொம்பவே அசைத்துவிட்டது.
சில தினங்களுக்கு முன் பேஸ்புக் பயனாளர்களுக்கு தடை விதித்த கூகுள், தற்போது, தங்கள் ஊழியர்கள் பேஸ்புக் நிறுவனத்துக்கு தாவாமல் தடுப்பதற்காக 10 சதவீத சம்பள உயர்வை அறிவித்துள்ளது கூகுள்.
இத்தகவலை வால்ட் ஸ்டீரிட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவன உயர் அதிகாரி எரிக் சிமிட் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "ஊழியர்களின் கடின உழைப்பை அங்கீகரித்து பாராட்டும் வகையில், சர்வதேச அளவில் பணியாற்றும் 23 ஆயிரம் ஊழியர்களுக்கும் 10 சதவீத சம்பள உயர்வை கூகுள் வழங்குகிறது" என்று கூறியுள்ளார்.
வரும் ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் கூகுள் நிறுவன முன்னாள் ஊழியர்களே.
கூகுளுக்குப் போட்டியாக தொழில்நுட்பம் மற்றும் விளம்பர யுத்தத்தில் இறங்கியுள்ள பேஸ்புக், கூகுளின் முக்கிய ஊழியர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி இழுக்கும் வேலையிலும் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.