மோகனகிருஷ்ணன் என்கெளண்டர்-சிபிஐ விசாரணை கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: குற்றவாளிகளை போலீஸார் என்கெளண்டர் செய்வது சரியா? தவறா? என்பது குறித்து சட்டசபையில் வாக்குவாதம் நடந்தது.

பள்ளி மாணவர்கள் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்மீது நடந்த விவாதம்:

செ.ம.வேலுசாமி (அதிமுக): கோவையில் பள்ளி செல்ல காத்திருந்த சிறுமி முஸ்கின் மற்றும் சிறுவன் ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டு, இதில் முஸ்கின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இருவரும் வாய்க்கால் தண்ணீரில் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் மட்டுமல்லாது, நாடு முழுவதுமுள்ள மக்களை இந்த சம்பவம் பதைபதைக்கச் செய்துள்ளது. கோவை கண்ணீரில் மூழ்கியது. தமிழகமெங்கும் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பயப்படக்கூடிய மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. போலீசார் சுயமாக பணியாற்றக்கூடிய நிலை இல்லாதது தான் இதற்கெல்லாம் காரணம்.

(தொடர்ந்து அவர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவ்த்தார்)

செங்கோட்டையன் (அதிமுக: இந்தக் குழந்தைகள் கொலை சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அதேசமயம் இதைத் தடுக்க முடியாத போலீஸாரின் கையாலாகாததனத்தையும் சுட்டிக்காட்டுகிறோம்.

கோவை தங்கம் (காங்கிரஸ்): இந்தக் குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்டதில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட அன்றே பொதுமக்கள் அடித்துக் கொல்வதற்கு பாய்ந்தார்கள். போலீசாரின் நடவடிக்கையை, என்கெளண்ட்டர் மூலம் குற்றவாளி கொல்லப்பட்டதை பொதுமக்கள் வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள். ஒருவேளை அவர்கள் தப்பியிருந்தால் அரசுக்கும், போலீசாருக்கும் கெட்டபெயர் ஏற்பட்டிருக்கும். தற்காப்புக்காக சுட்டுக் கொல்வது நியாயம் தான். குற்றவாளி கொல்லப்பட்ட பிறகு தான் மக்கள் தீபாவளி கொண்டாடியிருக்கிறார்கள். மற்றொரு குற்றவாளியும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

வேல்முருகன் (பாமக): சிறுவன், சிறுமியை கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் போலீசார் சுட்டுக் கொன்றதில் சில முரண்பாடுகள் இருக்கின்றன. நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் இது ஒரு நாடகம் போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் கூட உடனடியாக நாங்களே தண்டனை தருகிறோம் என்ற நிலை வந்துவிடக்கூடாது.

சென்னை சிறுவன் கடத்தலில் ராஜதந்திரரீதியில் அவன் மீட்கப்பட்டதை வரவேற்கிறோம். எனவே கோவை கடத்தல் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் தூக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்கலாம் என்பது எங்கள் கருத்து.

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): கோவையில் குழந்தைகளைக் கடத்தி கொலை செய்த மோகன்ராஜ், போலீஸ் விசாரணையில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தங்களைச் சுட்டதால் தற்காப்புக்காக போலீஸார் சுட்டனர் எனக் கூறுவது சரியாக இருக்காது. அப்படியென்றால், அரசும், நீதிமன்றமும் எங்கே? என்ற கேள்வி எழும். கோவையில் நடந்தது மிக மோசமான சம்பவம். நீதிமன்றத்தில் குற்றவாளிகளை பொதுமக்கள் சூழ்ந்து கோஷமிட்டதாக செய்திகள் வந்தன. மக்களிடம் இருந்து அவர்களை காப்பாற்றிய போலீஸார், சுட்டுக் கொன்றது சரிதானா?. இதுபோன்ற புதிய நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது.

அமைச்சர் அன்பழகன்: குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது. இந் நிலையில், குற்றவாளியை சுட்டுக் கொன்ற சம்பவத்தை குற்றமாகக் கூறுவது பொதுமக்களின் கருத்துகளுக்கு மாறாக அமையும்.

பாலபாரதி: பொதுமக்களின் உணர்வுகள் என்ற அடிப்படையில் குற்றவாளி சுட்டுக் கொல்லப்படும் சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது.

அன்பழகன்: போலீஸார் தற்காப்புக்காகவே சுட்டுள்ளனர். குற்றவாளிகள் சுட்டு விட்டு தப்பிக்க முயலும் போது போலீஸாரும் பாதிக்கப்படுவர். அந்தத் துறையும் பாதிப்பு அடையும். போலீஸாரும் மனிதர்கள்தானே. எனவே, தற்காப்பு நடவடிக்கையாக போலீஸார் சுட்டது குற்றமல்ல.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): மோகன்ராஜ் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றத்தின் பின்னணியை தெளிவுபடுத்த வேண்டும். நீதியை நின்ற இடத்திலேயே வழங்கி விடலாம் என்றால் நீதிமன்றம் எதற்கு?.

அன்பழகன்: தாக்குதல் நடைபெறும் போது தற்காப்புக்காக சுடப்படுவதை எப்படி தடுக்க முடியும்? தன்னை தற்காத்துக் கொள்ளாமல் எந்தக் கடமையையும் செய்ய முடியாது.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): கோவையில் நடந்த சம்பவம் சாதாரணமானது அல்ல. மனித மனசாட்சியை உறைய வைப்பது. காவல்துறை எடுத்த நடவடிக்கை குற்றம் என்பது போலப் பேசி குற்றவாளிகளுக்கு உற்சாகம் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது. மேலும், மக்களிடம் நம்மைப் பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தி விடும்.

சிவபுண்ணியம்: குற்றவாளிகள் செய்த கொலையை ஏற்க முடியாது. அவர்களுக்கு மரண தண்டனை வரை அளிக்கலாம். ஆனால், சுட்டுக் கொல்லும் சம்பவத்தைத்தான் ஏற்க முடியாது.

அன்பழகன்: இந்தப் பிரச்சனை குறித்து நீதிமன்றம் நடத்தி வரும் விசாரணையில் முழு விவரங்கள் தெரிய வரும். குற்றவாளியை சுடுவது மனித உரிமை மீறல் என்றால், அவர்களால் காவல்துறையினர் பாதிக்கப்படுவது மனித உரிமை மீறல் ஆகாதா? தான் தப்பிக்க முடியாது எனத் தெரிந்து கொண்டதால் தப்பிக்க முயன்ற குற்றவாளி காவல்துறைக்கு எதிராக நடந்து கொள்ள முயன்று இருக்கிறார். காவல் துறையின் நடவடிக்கை தவறு எனக் கூறுவது நியாயம் அல்ல என்றார்.

இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட துணை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக):

இந்த அரசை பொறுத்த வரையில் உங்களை வாழ்த்துவோரை மட்டும் பெரிதாக எண்ணிக் கொண்டு உங்களுடைய திட்டங்களை பற்றி எடுத்துச் சொல்வதை மட்டும் எடுத்துக் கொண்டு குறைபாடுகளை பற்றி சொல்பவர்களின் செய்திகளை நீங்கள் கேட்பதில்லை.ஒரு அரசின் கடமை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும், அவர்களின் பணி எவ்வகை தடையும் இன்றி தினமும் நடைபெற செய்வது தான். ஆனால் இன்றைக்கு சில சமூக விரோத கும்பல்கள் சராசரி குடிமகனின் அடிப்படை பாதுகாப்பையே கேள்வியாக்கி விட்டது.

இதுவரை சென்னையில் மட்டும் இருந்த தாதாக்கள் ராஜ்ஜியம், குக்கிராமம் வரை பரவிவிட்டது. குழந்தைகளை நிம்மதியாக பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. சென்ற மாதம், சென்னையில் அம்பத்தூர் நகரமன்ற திமுக கவுன்சிலர் மகன், அரசு பஸ் ஓட்டுனரை தாக்கியதால், போக்குரத்து நிறுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழகத்தில் குற்றங்கள் குறைவு என்று கூறலாகுமா? உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே நடந்த சண்டையில் எத்தனை வக்கீல்கள் தாக்கப்பட்டார்கள்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி (குறுக்கிட்டு): இந்த சம்பவம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அது பற்றி இங்கு பேசக்கூடாது என்றார்.

பொள்ளாச்சி ஜெயராமன்: கடந்த ஆட்சியில், இலவச பாடபுத்தகம், இலவச சைக்கிள் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். இதனை இந்தியா முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இப்போது 1.44 கோடி இலவச தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 50 லட்சம் தொலைக்காட்சிபெட்டிகள் வாங்க துணை மதிப்பீடுகளில் ரூ.261 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொலைக்காட்சி பெட்டிக்கும் கேபிள் டி.வி. இணைப்புக்கு மாத சந்தாவாக ரூ.100 முதல் ரூ.150 வரை பெறப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்ட 1.44 கோடி தொலைக்காட்சி பெட்டி ஒன்றுக்கு ரூ.100 வீதம் வைத்தாலும், மாதம் ஒன்றுக்கு ரூ.144 கோடி வருகிறது. இன்னும் வழங்க வேண்டிய 50 லட்சம் பெட்டிகளை வழங்கும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட கேபிள் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி பணம் போய் சேரும். தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. மூலம் இணைப்பை பெற்று இருக்கின்ற தொலைக்காட்சி பெட்டிகள் எண்ணிக்கை எவ்வளவு? இதன் மூலம் அரசு கேபிள் டி.வி.க்கு வருமானம் எவ்வளவு?

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த உமாசங்கர், எஸ்.சி.வி. கேபிள் டி.வியை அரசுடைமையாக்க வேண்டும் என்று 7.1.2009 அன்று திட்ட அறிக்கை அனுப்பினாரே. அது ஏன் செயல்பாட்டுக்கு வரவில்லை? அவர், காவல்துறை ஆணையருக்கு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை காப்பாற்ற அனுப்பிய புகாரின் மீது எடுத்த நடவடிக்கை என்ன?.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: உங்கள் ஆட்சியிலும் கேபிள் டி.வியை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுத்தீர்கள். ஆனால் அது முடியாமல் போனது. எனவே இப்போது அதை பேசுவது நியாயமாகுமா?.

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): கவர்னரிடம் சென்று நீங்கள்தான் அதனை வரவிடாமல் தடுத்தீர்கள்.

அமைச்சர் பரிதி இளம்வழுதி: உமா சங்கர் மீது நீங்களும்தான் நடவடிக்கை எடுத்தீர்கள். அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்றார்.

என்கெளண்டர்-சிபிஐ விசாரணை கோரி வழக்கு:

இதற்கிடையே சிறைவாசிகள் உரிமைகள் மையத்தின் இயக்குனர் வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

கோவையில் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்ற மோகன கடந்த 9ம் தேதி என்கெளண்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. அவரை சுட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கேட்டு உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., பொதுத்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் தெரிவித்தோம். ஆனால் இதுவரை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை.

விசாரணையின்போது மோகன்ராஜ் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதால் தற்காப்புக்காக அவரை சுட்டுக் கொன்றதாக கோவை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி போலீஸ் காவலில் உள்ள ஒருவர் என்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டால் அதைச் செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த என்கெளண்டரில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

மேலும் என்கெளண்டர் தொடர்பாக மாநில அரசு அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் என்கெளண்டர் குறித்து சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சி.பி. சி.ஐ.டி. விசாரணையில் நியாயம் கிடைக்காது.

எனவே சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். மோகன்ராஜை சுட்டுக் கொன்ற போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+