என்கவுன்டர் போலீசாருக்கு ரூ.25,000 பரிசு - பொள்ளாச்சி வியாபாரிகள் முடிவு!!
கோவை: பள்ளி மாணவர்களை கடத்தி, சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த மோகனகிருஷ்ணனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசாருக்கு ரூ 25 ஆயிரம் வெகுமதி வழங்கினர் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள்.
ஆனால் இதனை உடனடியாகப் பெற்றுக் கொள்ளமுடியாது என்றும், மேலிட அனுமதி பெற்ற பிறகு பெற்றுக் கொள்வதாகவும் போலீசார் தெரிவித்துவிட்டனர்.
மோகனகிருஷ்ணனால் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நேற்று நடந்தது.
சங்கத்தின் தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், குழந்தைகளின் படத்துக்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
கொலையாளி மோகன்ராஜை என்கவுன்டரில் கொன்ற போலீசாருக்கு பரிசாக, அனைத்து வியாபாரிகளின் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, பொள்ளாச்சி டி.எஸ்.பி., முத்தழகிடம் வழங்கினர்.
ஆனால், 'இரண்டு நாட்களுக்கு பின் வாங்கி கொள்கிறேன்' என, டி.எஸ்.பி., தெரிவித்ததால், திரும்பி வந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாழ்த்துக்கள் வேண்டாமே! - சைலேந்திர பாபு:
மோகனகிருஷ்ணனை, 'என்கவுன்டரில்' சுட்டுக் கொன்ற மாநகர போலீசார் மற்றும் கமிஷனர் சைலேந்திர பாபுவைப் பாராட்டி கோவை பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நகரெங்கும் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
வாழ்த்து தெரிவிக்க வருவோரை கமிஷனர் சைலேந்திர பாபு தவிர்த்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'என்கவுன்டர்' நடவடிக்கை தவிர்க்க முடியாத சூழலில் எடுக்கப்பட்ட ஒன்று. சட்டப்படியான, தவிர்க்க முடியாத தற்காப்பு நடவடிக்கை. எனவே வாழ்த்துக் கூற வேண்டாம்' என்றார்.