ஆட்சியா, திமுக கூட்டணி வேண்டுமா என்பதை காங்.தான் முடிவெடுக்க வேண்டும்-மைத்ரேயன்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவை நீக்குவது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. திமுக கூட்டணி வேண்டுமா அல்லது மத்திய கூட்டணி ஆட்சி வேண்டுமா என்பதை காங்கிரஸ்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் ராஜா நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரின் ஒரே கோரிக்கையாகும் என்று கூறியுள்ளார் ராஜ்யசபா அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமைச்சர் ராசா ஊழல்களுக்கு சக்கரவர்த்தி. அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆதரவு முக்கியம்தான். ஆனால் செல்வாக்கையும் நற்பெயரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது காங்கிரஸ் கட்சிக்கு அதைவிட முக்கியமானதாகும். திமுக கூட்டணியா அல்லது ஆட்சியா, நற்பெயரா என்பதை காங்கிரஸ் கட்சி தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.