மேலவைத் தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்பை ஒத்திவைக்க அதிமுக கோரிக்கை
சென்னை: தமிழக மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியிடம் அதிமுக எம்.பிக்கள் மனு அளித்துள்ளனர்.
தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி மற்றும் தேர்தல் ஆணையாளர்களிடம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எம்.தம்பிதுரை, டாக்டர் வி.மைத்ரேயன், எஸ்.செம்மலை, பி.வேணுகோபால், பி.எச்.மனோஜ் பாண்டியன், ஓ.எஸ்.மணியன், சி.ராஜேந்திரன், என்.பாலகங்கா, சி.சிவசாமி, எம்.ஆனந்தன், ஏ.இளவரசன், கே.சுகுமார், பி.குமார், கே.வி.ராமலிங்கம் ஆகியோர் கையெழுத்திட்டு அளித்துள்ள மனுவில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் மீண்டும் மேல்-சபை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், சட்ட மேல்-சபை தேர்தலுக்கான தொகுதிகள் அவசர அவசரமாக மறுவரையறை செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை. அது மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் தெரிவித்த ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை.
அரசியலமைப்புச் சட்டம் 327-வது பிரிவு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 13-வது பிரிவு ஆகியவற்றைப் பின்பற்றி சட்டப்பேரவை மற்றும் சட்ட மேல்-சபை தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
மேல்-சபை தொகுதி மறுவரையறையைப் பொருத்தவரை, பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து, அதனடிப்படையில் தொகுதி மறுவரையறை ஆணையம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. இது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே, சட்ட மேல்-சபை தொகுதிகளை மறு வரையறை செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு ஒப்புதல் கிடைத்த பிறகுதான் ஜனாதிபதியின் உத்தரவு நடைமுறைக்கு வரும். தேர்தல் ஆணையத்தை கலந்து ஆலோசிக்காமல் ஜனாதிபதி அறிவிக்கை வெளியிட்டிருப்பது சட்டத்தின் பார்வையில் செல்லத்தக்கதல்ல.
இந்த நிலையில், மேல்-சபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதும், தேர்தல் நடத்துவதும் சட்டவிரோதம். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், பாராளுமன்ற நடைமுறைகளுக்கும் எதிரானது ஆகும். எனவே, தொகுதி மறுவரையறை செய்வதற்காக முதலில் மறுவரையறை கமிஷனை ஏற்படுத்த வேண்டும்.
சட்டப்படி தொகுதிகள் மறுவரையறை இறுதி செய்யப்படும் வரை, மேல்-சபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.