ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து- கண்டித்து மக்கள் ஆர்பாட்டம்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றிய தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் கூறி வருகின்றனர். மேலும், நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியது.
நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கும் நிதி உதவிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரி பொது மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் தமிழ்மாந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், பங்குத் தந்தை வெனிஸ் இளங்குமரன், வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.