திராவிட விழிப்புணர்ச்சி கழகம் அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் என பெயர் மாற்றம்
மதுரை: திராவிட விழிப்புணர்ச்சி கழகம் அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
திராவிட விழிப்புணர்ச்சி கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் மதுரையில் நடந்தது. அதில் இன்று முதல் கட்சியின் பெயர் அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் என மாற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கட்சியின் பெயரோடு, கட்சிக் கொடியும் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொடி மஞ்சள் நிறத்தில் மஞ்சள் நிறப் புலி உருவம் கொண்டதாக உள்ளது. கட்சியின் அவைத்தலைவராக ராஜபாண்டியனும், பொருளாளராக கருப்பையாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 10 மாவட்டங்களின் செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக வக்கீல் செந்தில், புறநகர் மாவட்ட செயலாளராக நல்லமணி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக பூமிநாததேவர், விருதுநகர் மாவட்ட செயலாளராக சாத்தூர் பால்பாண்டியன் உள்பட 18 பேர் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்த தேவரின மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தேவரின மக்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.
மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை உடனே சூட்ட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.