திமுகவுக்கு காங்கிரஸிடமிருந்து எந்த நெருக்கடியும் இல்லை-கனிமொழி
சென்னை: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸிடமிருந்து திமுகவுக்கு எந்த நெருக்குதலும் வரவில்லை, நிர்ப்பந்தமும் இல்லை என்று திமுக ராஜ்யசபா உறுப்பினரும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பிரச்னை இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. இப்பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடமிருந்து தி.மு.க.வுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை.
அமைச்சர் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்திடமிருந்து தி.மு.க.வுக்கு எந்த தகவலும் வரவில்லை.
தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. இரு கட்சிகள் இடையேயான உறவு சுமுகமானதாகவும், வலுவானதாகவும் உள்ளது என்றார் கனிமொழி.
முன்னதாக கனிமொழி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ராஜா விதிமுறைப்படிதான் செயல்பட்டுள்ளார். விதி மீறலில் அவர் ஈடுபடவில்லை. முன்பு இருந்த அமைச்சர்கள் எந்த விதிகளை பின்பற்றினார்களோ அதையேதான் அவரும் பின்பற்றினார். எனவே அவரை நீக்கக் கூடாது என்று வலியுறுத்தியது நினைவிருக்கலாம்.