தீபாவளி பரிசு சீட்டு நடத்தி ரூ 50 லட்சம் மோசடி செய்த தம்பதி தலைமறைவு!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தீபாவளி பரிசு சீட்டு நடத்தி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவான கணவன், மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், தீபாவளி பரிசு சீட்டு நடத்துவதாக கூறி அப் பகுதியில் உள்ள பொது மக்களிடம் சுமார் ரூ 50 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளார்.
காலக்கெடு முடிந்தும் பணம் கட்டியவர்களுக்கு, உரிய தொகையை திருப்பி தரவில்லை. பரிசும் தரவில்லை.
இதனால் பணம் கட்டியவர்கள் ஒவ்வொருவரும் கார்திகேயனை தேடி அவரது வீட்டுக்குச் சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென கார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியும் அங்கிருந்து மாயமானார்கள் . இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் தலைமையில் ஒன்று சேர்ந்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், தலைமறைவான கார்த்திகேயனையும் அவர் மனைவியையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.