கண்டெய்னர் லாரிகள் ஸ்ட்ரைக்.. சென்னை துறைமுகப் பணிகள் ஸ்தம்பிப்பு!
சென்னை: கார் டிரைவர் - கண்டெய்னர் டிரைவர் இடையே நடந்த மோதல் காரணமாக கண்டெய்னர் லாரிகள் திடீர் ஸ்ட்ரைக்கில் குதித்தனர்.
இதனால் சென்னை துறைமுகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவொற்றியூரை சேர்ந்தவர் சேகர். கண்டெய்னர் லாரி டிரைவர். இவர் எர்ணாவூர் மேம்பாலம் அருகே கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த போது, பின்னால் வேகமாக வந்த காருக்கு வழிவிடவில்லையாம். கே.வி. குப்பம் அருகே கண்டெய்னர் லாரியை கார் முந்தியது.
லாரியை மடக்கும் விதத்தில் காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கிய சிலர் இரும்பு கம்பியால் டிரைவர் சேகரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து சேகர் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் பொறுமை இழந்த டிரைவர்கள் நேற்று முதல் லாரியை ஓட்டாமல் ரோட்டு ஓரம் வரிசையாக நிறுத்திவிட்டனர். துறைமுகத்தில் இருந்து வெளியே வந்த லாரிகளும் ஆங்காங்கே நின்று விட்டன.
துறைமுக நிர்வாகத்தினரும் பேலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதை கண்டெய்னர் டிரைவர்கள் ஏற்கவில்லை. தாக்கிய கும்பலை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து விட்டனர்.
இதனால் துறைமுகத்துக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் எண்ணூர் விரைவு சாலையில் நிறுத்தப்பட்டன. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
துறைமுகத்தில் அன்றாட ஏற்றுமதி இறக்குமதி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்றும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நவம்பர் 22-ம் தேதி இன்னொரு ஸ்ட்ரைக்!
இந்த நிலையில் துறைமுகம் - எண்ணூர் ரோடு சரியில்லாததால் வருகிற 22-ந்தேதி கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் நடத்த உள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுகுமார் கூறியுள்ளார்.