சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு : அமைச்சர் கீதா ஜீவன்
நெல்லை: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை அரசு துறைகளில் பணியமர்த்த சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
நெல்லையில் நடந்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிய மாநாட்டில் சமூக நலம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், "எதிர்கால சந்ததிகளை பராமரிக்கும் பணியை அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது சிரமங்களை உணர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சத்துணவு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ரூ.1238 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு கடந்த 2005-06 ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 4 மடங்கு அதிகமாக 2010-2011ல் ரூ.2754 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சத்துணவு பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சமூக நலத்துறை உள்பட 4 துறைகளில் பதிவுத்துறை எழுத்தர், உதவியாளர்கள், கண்காணிப்பாளர் நிலை 2 பதவிகளில் தகுதியுள்ளவர்களை பணியமர்த்த சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவு இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் வழங்கப்படும்.
இதே போன்று பி.எட். படித்துவிட்டு சத்துணவு, அங்கான்வாடி துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கும் பொருட்டு இம்மாத இறுதியில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க முடியாத நிலை இருந்தது. தற்போது 10 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்ற சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பொது வருங்கால நிதி திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications