மோகனகிருஷ்ணன் என்கௌண்டர்: கமிஷனர் டிசம்பர் 6-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கோவையில் மோகனகிருஷ்ணன் என்கெளன்டர் குறித்த முழு விவரங்களையும் டிசம்பர் 6ம் தேதி சமர்ப்பிக்குமாறு கோவை காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் அக்கா, தம்பியான பள்ளிச் சிறார்களைக் கடத்திச் சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த மோகனகிருஷ்ணனை போலீஸார் கடந்த 9-ம் தேதி என்கௌண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று கூறி சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா ஆஜராகி வாதாடினார்.
ராதாகிருஷ்ணன் கோவை காவல் துறை அதிகாரிகள் தங்கள் காவலில் இருந்த ஒரு கைதியைச் சுட்டுக் கொன்றதன் மூலம் சட்டத்தை மீறியுள்ளனர். இது நீதித்துறைக்கே விடுக்கப்பட்ட சவாலாகும் என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கோவை போலீஸ் கமிஷனர் வரும் டிசம்பர் 6-ம் தேதிக்குள் இந்த வழக்கு குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications