கபில் சிபல் வசம் தொலைத் தொடர்புத் துறை-பிரதமர் அதிரடி-திமுக அதிர்ச்சி
தொலைத் தொடர்புத்துறை திமுக வசமே இருக்கும் என்று அக் கடசியின் மூத்த எம்பியான டி.ஆர்.பாலு இன்று காலை கூறியிருந்த நிலையில், தற்போது திமுக அமைச்சர்கள் யாரிடமும் கூடுதல் பொறுப்பை கொடுக்காமல் கபில் சிபலிடம் கொடுத்து விட்டார் பிரதமர்.
மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராசா வகித்த பதவிக்கு அடுத்து யார் புதிய அமைச்சர் என்ற கேள்வி எழுந்தது. பிரதமரே கூடுதலாக அந்த பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் கபில் சிபல் கூடுதலாக தொலை தொடர்புத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பிருத்விராஜ் சவான் மகாராஷ்டிர முதல்வராக நியமிக்கப்பட்டதால், அவர் வசம் இருந்த அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறையையும் சிபலே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, பிருத்விராஜ் சவான் வசம் இருந்த இன்னொரு துறையான பெர்சனல் மற்றும் பயிற்சித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கே கிடைக்கும்-பாலு நம்பிக்கை
முன்னதாக இதுகுறித்து டி.ஆர்.பாலுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, திமுகவசம் இருந்தது தொலைத் தொடர்புத்துறை. தற்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருவதால், கட்சி மேலிட உத்தரவுப்படி அவர் ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்த அமைச்சர் யார் என்பதை முதல்வர் கருணாநிதிதான் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார்.
பாலு வீட்டில் அவசரக் கூட்டம்:
இந்த நிலையில் டி.ஆர்.பாலுவின் டெல்லி வீட்டில் இன்று திமுக எம்.பிக்களின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா ராஜினாமா ஏற்பு:
இதற்கிடையே, அமைச்சர் ராஜாவின் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார். இதுதொடர்பான கடிதத்தை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.